மே 04, 2015

வறண்ட குளம்


எங்க ஊர் குளம்

தாகமெடுத்த குளமிது
தற்கொலைச் செய்து கொண்டது.

கரை உடைத்த நீரெங்கே

கரை வளர்த்த மரமெங்கே
தாமரை போர்வை எங்கே- அவைத்
தரும் வாச பூக்களெங்கே.

குளமே...

உன்னில் மூழ்கி
உயிர்விட்ட வரலாறு அன்று
உன்னுயிரே மூழ்கிய 
வரலாறாய் இன்று.

தாகச்சுமையோடு இனி

பறவைகள் எப்படி
சிறகடிக்கும்?

மண்ணைக் குடியென்று

பழக்குவதெப்படி 
மாடு ஆடுகளை?

குடமுடைத்து வருபவன் 

இனிதலை முழுகுவது எப்படி?

தடாகமே... 

உன்தற்கொலைக்கான
தடையம் தேடும்
தருணம் இதுவல்ல.
உயிர்த்தெழு... எம்
உயிர் நனைக்கவும் 
உடல் துவைக்கவும்.


#கவிதை : சி.கருணாகரசு
படம்: தி.தமிழருவி.
இடம் : உகந்த நாயகன் குடிக்காடு
Related Posts with Thumbnails